குறுங்கவிதைகள்

ஏ.ஆகாஷ் (கடுக்கலூர்)

பால் விற்பவரின்
குழந்தை அழுகிறது
பசியில்.

*
தூக்கமில்லா இரவு
விழித்திருக்கிறது
துக்கம்.

*
தன்னைத் தானே
கொல்லும் ஆயுதம்
பசி.

*
விவசாயிகளின்
நண்பன் என்பதால் என்னவோ?
சேற்றில் மட்டுமல்ல
சோற்றிலுமிருக்கின்றன
புழுக்கள்.

*
அத்தனை பூக்களிருக்க
உன் மீது அமர்கிறது
பட்டாம்பூச்சி.!

*
கரையே!
காதலியின் தலை
அதை வருடும்
அலைகளே!
காதலனின் கரங்கள்

*
இப்போதும்
தொட்டாச்சுருங்கியைப் பார்த்தால்
தொட்டுப்போகிறது மனம்.

Post Comment